அகல கால்வைக்க முயன்ற சீன கோடீஸ்வரருக்கு ஏற்பட்ட நிலை


சீனாவில் கோடீஸ்வரராக இருந்த ஒருவர் பல்வேறு தொழில்களில் முதலிட முயன்று அனைத்தையும் இழந்த நிலையில் தற்போது வீதியோரமாக சின்னஞ்சிறிய கடையை நடத்தி வருவது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சீனாவின் Hangzhou மாகாணத்தை சேர்ந்தவர் டாங் ஜியான் (Tang Jian). தற்போது 52 வயதான டாங் இளம் வயதிலேயே பல உணவகங்களை நடத்தி வந்ததாக சீன ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.

தன்னுடைய 36 ஆம் வயதில், டாங் பல உணவகங்களை நிர்வகித்து வந்ததாகவும் ஆனால் 2005 ஆம் ஆண்டளவில் அவருடைய தொழிலில் பாதிப்பு ஏற்பட்டதாகவும் தெரிகிறது. குறிப்பாக 2005 ஆம் ஆண்டு பல துறைகளில் அவர் முதலீடு செய்திருந்ததாகவும் அதில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து அவர் வங்கிகளில் பெற்ற கடனை திரும்பிச் செலுத்த தனது வீடு, உணவகங்கள் கார் உள்ளிட்டவற்றை விற்றதாக தெரிகிறது. ஆனாலும், தற்போது வரையில் அவருக்கு சுமார் 6.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வங்கி கடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், வங்கியில் வாங்கிய கடனை அடைக்க அவர் சாலையோரமாக கிரில் சாசேஜ் தயாரித்து விற்பனை செய்துவருவதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து சீன ஊடகத்திடம் அவர் அளித்த பேட்டியில்,"எங்களுடைய ஒவ்வொரு சாசேஜ்-ம் உண்மையிலேயே இறைச்சியால் நிரப்பப்படுகிறது. பொழுதுபோக்கு பூங்காக்கள் அல்லது சந்தைகளில் விற்கப்படுபவைகளுடன் ஒப்பிடும்போது, எங்களுடையது உங்களை பாதுகாப்பாக உணர வைக்கும்.

நாம் ஒவ்வொருவரும் ஒரு சவாலான வாழ்க்கையை வாழ்கிறோம் மற்றும் பல சிரமங்களை எதிர்கொள்கிறோம். ஆனால் நாம் ஒருபோதும் தோற்கடிக்கப்படக்கூடாது என்ற மனப்பான்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். கஷ்டங்களை நிதானமாக எதிர்கொள்ளவும், தைரியமாக முன்னேறவும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்.

நாம் ஒன்றுமில்லாமல் பிறக்கிறோம். மீண்டும் தொடங்குவதற்கு ஏன் பயப்பட வேண்டும்?" என கூறியிருக்கிறார். மேலும், எப்படியாவது வங்கியில் பெற்ற கடனை தான் திரும்ப செலுத்திவிடுவேன் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் டாங். இதனிடையே இவர் குறித்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. பலரும் டாங்கின் தன்னம்பிக்கையை பாராட்டி வருகின்றனர்.