உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியில் பிள்ளையானின் சகா: வெளியாகிய அதிர்ச்சியூட்டும் தகவல்

 கடந்த 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிடப்போவதாக செனல்-4 அறிவித்துள்ள நிலையில், கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையானிள் முன்னாள் பேச்சாளரே இதில் முக்கிய பாத்திரம் வகிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

"இலங்கையின் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகள் - அனுப்புதல்கள்" என்ற தலைப்பில் நாளை (05.09.2023) ஒளிபரப்பப்படவுள்ள இந்த நிகழ்ச்சியில், 'அரசாங்கத்திற்குள் உள்ள அதிகாரிகளே, தாக்குதல்களுக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தற்போது புகலிடம் கோரி சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் வசிக்கும் பிள்ளையானின் முன்னாள் பேச்சாளர் ஆசாத் மௌலானவே இந்த காணொளியின் முதன்மையான ஆதாரமாக இருப்பதாக தகவலறிந்த தரப்புகள் தெரிவித்தன.

இந்த காணொளியை ஆகஸ்ட் 15 ஆம் திகதி ஒளிபரப்ப செனல்-4 திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் செனல்-4 க்கு, இலங்கையின் அரச புலனாய்வு சேவையின் (SIS) தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலி தனது சட்டத்தரணிகள் மூலம் வழங்கிய தெளிவுபடுத்தலைத் தொடர்ந்து, அன்றைய தினம் காணொளி ஒளிபரப்பை நிறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவங்கள் தொடர்பில், ஆசாத் மௌலானா, தனது பெயரைப் பயன்படுத்தியுள்ள காலத்தில், தாம் இலங்கையில் கடமையாற்றவில்லை என்பதை,மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலி, உறுதிப்படுத்தும் ஆவணங்களுடன் செனல்-4 க்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலியின் பதிலைத் தொடர்ந்து, சேனல்-4 காணொளியின் தலைப்பை மாற்றி நாளைய தினம் அதனை ஒளிபரப்பத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே செனல் 4 இலங்கையின் கொலைக்களம் என்ற தலைப்பில் ஒரு ஆவணப்பட காணொளியை ஒளிபரப்பியது. இது இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் இறுதி வாரங்கள் பற்றிய அதிர்ச்சியூட்டும் காணொளியாக வெளியாகியிறுந்தமை குறிப்பிடத்தக்கது.