இலங்கையில் சர்ச்சையை தோற்றுவித்துள்ள சனல் 4 விவகாரம்: போலிச் செய்தி என அறிவிப்பு


சனல் 4 வீடியோவில் பேசியது போலிச் செய்தியை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கலாம் என தேசிய பாதுகாப்பு மற்றும் சர்வதேச பயங்கரவாதம் தொடர்பான நிபுணரும் ஈஸ்டர் தாக்குதல் குறித்து பல ஆய்வுகளையும் ஆய்வுகளையும் செய்துள்ள பேராசிரியருமான ரொஹான் குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குற்றவியல் புலனாய்வு திணைக்களம் மற்றும் பயங்கரவாத புலனாய்வு பிரிவு ஆகியவற்றிலிருந்து மாத்திரமின்றி அமெரிக்காவின் FBI மற்றும் ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸ், இன்டர்போல், வெளிநாடுகளில் இருந்து அதிகாரிகள் மற்றும் இந்த அனைத்து அமைப்புகளினதும் இலங்கை அதிகாரிகளும் பல அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.

அது மாத்திரமல்ல இலங்கையில் மூன்று தகவல் கோரும் ஆணைக்குழுக்கள் இது தொடர்பாக மூன்று அறிக்கைகளை தற்போது வெளியிட்டுள்ள நிலையில் இந்த விடயங்களைப் பார்க்கும் போது, ​​ சனல் 4 ஊடகத்தில் பேசியது அந்த போலிச் செய்தியை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கலாம்.

சனல் 4 ஊடகத்தை இலங்கைக்கு அழைத்து சனல் 4ல் இருந்து இதை விசாரித்தவர்களிடம் பேசிவிட்டு இந்த அறிக்கைகளை படித்துவிட்டு சந்தேக நபர்களையும் பேச வைக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.

அப்போது இது இந்த அரசாங்கம் செய்த காரியம் அல்ல. இது நமது ராணுவம் செய்த காரியம் அல்ல. இது அடிப்படைவாத தீவிரவாதம், தீவிரவாதத்தில் இருந்து வன்முறை வந்தது அதிலிருந்து பயங்கரவாதம் வந்ததென கூறுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.