மஹிந்தவை கைது செய்யுமாறு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்கை!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சந்தேக நபர்களை கைது செய்யுமாறு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் ஜனாதிபதி மற்றும் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.காலி முகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்திய குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.பொலிஸ்மா அதிபர் மற்றும் ஜனாதிபதிக்கு கடிதத்தை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அச்சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க இதனை கூறினார்.இதேவேளை புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நியமனத்தை ஆசிரியர் சேவை சங்கம் எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படும் நிலையிலும் பொது மக்களின் கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி செவிசாய்க்கவில்லை என மஹிந்த ஜயசிங்க குற்றம் சாட்டினார்.