முல்லைத்தீவில் மாணவர்களை ஏற்ற மறுக்கும் பேருந்துகள் - பரீட்சைக்கு செல்லமுடியாது வீதியில் தவிப்பு


முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட மாங்குளம் மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் பனிக்கன்குளம், கிழவன்குளம் பகுதிகளைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களை ஏ_ 9 வீதியில் அதிகளவான போக்குவரத்து சேவைகள் இருந்தும் மாணவர்களை ஏற்றாது செல்வதால் பாடசாலை செல்லவும் மீண்டும் பாடசாலையில் இருந்து வீடு வரவும் மிகவும் சிரமப்படுகின்றனர். 

இது தொடர்பாக பல்வேறு தரப்பினருக்கும் குறிப்பாக வடமாகாண ஆளுநர், வடமாகாண போக்குவரத்து துறை சார்ந்த உயர் அதிகாரிகள், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பலருக்கும் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாணவர்கள் இன்றும் பாதிக்கப்படும் நிலையே காணப்படுகிறது. 

இவ்வாறான நிலையில் பரீட்சை நடைபெறும் இந்தக் காலப்பகுதியிலும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.   

இவ்வாறு பேருந்துகள் ஏற்றாமல் செல்வதால் வீதியை மறித்து பாரிய போராட்டம் ஒன்றை செய்தபோது காவல்துறையினர் இந்த விடயம் தொடர்பில் மாங்குளம் நீதிமன்றுக்கு கொண்டு சென்று வடமாகாண போக்குவரத்து பிரிவினருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது. 

இதனைவிட இலங்கை போக்குவரத்து சபை உயர் அதிகாரிகளால் மாணவர்களை பருவகால சிட்டை பெறுமாறு ஆலோசனை வழங்கப்பட்டது.

மாணவர்கள் பருவகால சிட்டையை பெற்றும் எந்தவித முன்னேற்றமும் இல்லை. மாறாக பருவகால சிட்டை பெற்றபின்னர் ஏற்றாமல் செல்வது அதிகரித்திருப்பதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான பின்னணியில் பாடசாலையில் பரீட்சை நடைபெறுகின்ற நிலையில் இன்று(13) காலை 8.12 மணிவரை மாணவர்களை எந்த பேருந்துகளும் ஏற்றால் சென்ற நிலையில், மாணவர்கள் தவித்து நின்ற நிலையில் மாங்குளம் போக்குவரத்து காவல்துறையினர் அழைக்கப்பட்டு மாணவர்கள் பேருந்தில் ஏற்றிவிடப்பட்டுள்ளனர். 

குறித்த பேருந்து நடத்துனர் காவல்துறையினருடன் வாக்குவாதம் பட்டே பேருந்தில் மாணவர்களை ஏற்றி சென்ற அதேவேளை, குறித்த விடயங்களை ஒளிப்பதிவு செய்த ஊடகவியலாளருக்கும் அச்சுறுத்தல் விடுத்துச் சென்றுள்ளார்.   

தொடரும் இந்த நிலைக்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இல்லையேல் ஏ_9 வீதியை மூடி மாபெரும் போராட்டம் மேற்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.