யாழில் பழுதடைந்த இறைச்சியுடன் கொத்து ரொட்டி - பிரபல உணவகத்திற்கு சீல்!


யாழ் மாநகரசபைக்கு உட்பட்ட ஆனைப்பந்தி பகுதியில் அமைந்துள்ள பிரபல அசைவ உணவகத்தில் புதன்கிழமை மாலை ஒருவரால் வாங்கப்பட்ட கொத்து ரொட்டியில் உள்ள இறைச்சி பழுதடைந்தமை தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர் பு. ஆறுமுகதாசன் இற்கு முறைப்பாடு கிடைத்தது.

இதனையடுத்து மாநகர சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பாலமுரளி தலைமையில் யாழ் மாநகர சபை பொது சுகாதார பரிசோதகர்கள் நேற்றைய தினம் வியாழக்கிழமை குறித்த கடையில் திடீர் பரிசோதனை மேற்கொண்டனர்.

இதன்போது மிகவும் பழுதடைந்த குளிர்சாதன பெட்டியில் சுகாதார சீர்கேடான முறையில் சமைத்த சமைக்காத கோழி இறைச்சி, மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி என சுமார் 45 கிலோ இறைச்சி களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டதுடன் மேலும் பல குறைபாடுகள் இனங்காணப்பட்டது.

இதனையடுத்து இன்று வெள்ளிக்கிழமை பொது சுகாதார பரிசோதகர் பு. ஆறுமுகதாசனால் மேலதிக நீதவான் நீதிமன்றில் "B" பத்திரத்தினூடாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கினை விசாரித்த நீதவான் கடையினை மறு அறிவித்தல் வரை மூடி சீல்வைக்குமாறும், கைப்பற்றப்பட்ட 45kg இறைச்சியினை அழிக்குமாறும் பொது சுகாதார பரிசோதகரிற்கு உத்தரவிட்டதுடன் வழக்கினை யூன் மாதம் 28ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.