மூன்றாவது முறையாகவும் ஆட்சி அமைக்கவுள்ள பா.ஜ.க - நிபந்தனைகளை விதித்துவரும் கூட்டணி கட்சிகள்

இந்திய மக்களை தோ்தலின் முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றாவது முறையாகவும் ஆட்சியமைக்கவுள்ளது.

  இந்தியாவின் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், நேற்று காலை 8 மணிக்கு வாக்கெண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்நிலையில் இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில், பா.ஜ.க கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் கைப்பற்றியுள்ளது.

அதன்படி, பாரதிய ஜனதா கட்சி 240 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி 99 தொகுதிகளிலும் சமாஜ்வாதி கட்சி 37 தொகுதிகளிலும் அகில இந்திய திரிணாமூல் காங்கிரஸ் 29 தொகுதிகளிலும் திராவிட முன்னேற்றக் கழகம் 22 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.  

தேசிய ஜனநாயக கூட்டணியில் பீகார் முதல்-மந்திரி தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம், சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம், முன்னாள் பிரதமர் தேவகவுடா தலைமையிலான மதசார்பற்ற ஜனதாதளம், மராட்டிய முதல்- அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், சிரங் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி உள்பட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த கூட்டணி கட்சிகள் மொத்தம் 52 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் பா.ஜ.க. கூட்டணி 292 இடங்களில் வென்றுள்ளது. மத்தியில் ஆட்சியமைக்க 272 தொகுதிகளை கைப்பற்றவேண்டிய நிலையில் பாஜக கூட்டணி 292 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதனால் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 3 ஆவது முறையாக ஆட்சியமைக்க உள்ளது.

எனினும், இந்த தேர்தலில் பா.ஜ.க விற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பா.ஜ.க ஆட்சியமைப்பதில் கூட்டணிகளின் ஆதரவையே தங்கியிருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், பா.ஜ.க விற்கு கூட்டணி கட்சிகள் சில நிபந்தனைகளை விதித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, மத்தியில் 3 ஆவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில்,

ஆந்திர மாநிலத்தின் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் மற்றும் பீகார் மாநிலத்தின் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கூட்டணி கட்சிகள் நிபந்தனைகள் விதிப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறிப்பாக இந்த இரு மாநிலங்களும் சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வரும் நிலையில், இந்த கோரிக்கையை, தற்போது ஆட்சிக்கு ஆதரவு தெரிவிக்க நிபந்தனைகளாக விதித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், தனது வெற்றி குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மோடி,

கட்சி ஆதரவாளர்களை சந்தித்து, தொடர்ந்து மூன்றாவது தடவையாகவும் ஆட்சியமைக்கும் நம்பிக்கையுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் 3 ஆவது ஆட்சியில் மிகப்பெரிய முடிவுகள் எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்துள்ள அவர், உலகின் 3ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை மாற்ற அதிதீவிர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


இதேவேளை இந்தியப் பொதுத் தேர்தலில் தமது கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், இலங்கையுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இதனை அவர் தமது எக்ஸ் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார் அத்துடன் தனது வெற்றியைத் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அதன்படி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து அனுப்பப்பட்ட செய்திக்கு பதிலளித்த மோடி, இந்தியா-இலங்கை பொருளாதார கூட்டுறவில் தொடர்ச்சியான ஒத்துழைப்பை நான் எதிர்பார்க்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் எதிர்க்கட்சி தலைவர்  சஜித் பிரேமதாசவின் வளத்துக்கு பதிலளித்துள்ள அவர்,

உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி  இலங்கையுடனான இந்தியாவின் உறவுகள் சிறப்பானவை மற்றும் தனித்துவமான சகோதரத்துவமானவை.

எங்கள் அண்டை நாட்டிற்கு முன்னுரிமை கொள்கைக்கு இணங்க பிரிக்க முடியாத பிணைப்புகளை மேலும் வலுப்படுத்த நாங்கள் உறுதி பூண்டுள்ளோம் என மோடி பதிலளித்துள்ளார்.

மேலும் முன்னாள் பிரதமர்  மகிந்த ராஜபக்சவின் வாழ்த்து செய்திக்கு பதிலளித்துள்ள மோடி,

 இந்தியா-இலங்கை கூட்டாண்மைக்கு உங்களின் தொடர்ந்த ஆதரவை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை  முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவின் வாழ்த்து செய்திக்கு பதிலளித்துள்ள அவர்,
 
இலங்கையுடனான எமது உறவுகள் விசேடமானவை.  இலங்கையை மேலும் ஆழப்படுத்தவும் வலுப்படுத்தவும் நாங்கள் தொடர்ந்து மக்களுடன் இணைந்து பணியாற்றுவோம் என மோடி பதில் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.