மட்டக்களப்பு மண்ணுக்கு மற்றொரு பெயரும் இருக்கின்றது: வீரம் விளை நிலம்.

அந்த வீரம் விளைநிலத்தின் அரசாங்க அதிபர் ஊடகவியலாளர்களை தவிர்த்து ஓடுவதாகவும், ஊடகவியலாளர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் கூறாமல் நழுவிச்செல்வதாகவும் மட்டக்களப்பு ஊடகவியலாளர்கள் குற்றம் சுமத்துகின்றார்கள்.

கடந்த மூன்று தினங்களுக்கு முன்பதாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் நடவடிக்கைகளின் போது, ஊடகவியலாளர்கள் பல நேரம் வெளியே காத்திருந்தார்கள்.

ஊடகவியலாளர்களை வெளியில் காக்க வைத்த அரசாங்க அதிபர், கடைசியில் தகவல்களை வழங்க மறுத்து அங்கிருந்து வெளியேறிச்சென்றதாக ஊடகவியலாளர்கள் குற்றம் சுமத்துகின்றார்கள்.

'ஊடகவியலாளர்களைச் சந்திக்க மேடத்துக்குப் பயமா..' என்று அதிகாரிகள் ஊடாகச் செய்தியனுப்ப, அரச அதிபருக்கு ரோசம் வந்து நேற்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

அந்த ஊடக சந்திப்பிலும் அரசாங்க அதிபரிடம் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியிருந்தார்கள் ஊடகவியலாளர்கள்.

கிழக்கின் பிரதேசவாதத்தை முன்னிலைப்படுத்தி அரசியல்செய்துவரும் ஒரு அரசியல்வாதிக்கு மிகவும் நெருக்கமானவர் என்று மட்டக்களப்பு மக்களால் விமர்சிக்கப்பட்டுவரும் அரசாங்க அதிபரிடம், ஊடகவியலாளர்களைத் தவிர்த்துவிட்டுச்சென்ற அவரது நடவடிக்கைகக்கு ஏதாவது அரசியல் பின்புலம் இருக்கின்றதா என்ற தொணியில் கேள்வியெழுப்பியிருந்தார்கள் ஊடகவிலாளர்கள்.

கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் திணறிய மாவட்ட அரசாங்க அதிபர் இடை நடுவில் ஊடக சந்திப்பை ரத்து செய்து சென்றுவிட்டதாக ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

பொதுவாகவே வேட்புமனுத்தாக்கல் நடைபெற்றால், அதன் விபரங்கள் ஊடகவியலார்களுக்கு உடனுக்குடன் வெளியிடப்படுவது ஒரு மரபு.

எத்தனை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன, எத்தனை மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன, எந்தெந்த அரசியல் கட்சிகளின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன உட்பட தேர்தல் சார்ந்த விடயங்கள் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் ஊடாக ஊடகங்களுக்கு வழங்கப்படுவது என்பது தேர்தல் காலத்தில் அரசாங்க அதிபர் தரப்பில் மேற்கொள்ளப்படுகின்ற ஒரு நடவடிக்கை.

ஆனால் வேட்புமனுத்தாக்கல்செய்யப்பட்டு 2 நாட்களின் பின்பே அரசாங்க அதிபர் ஊடகவியலாளர் சந்திப்பை மேற்கொள்வதென்பது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாகக் கூறுகின்றார்கள் ஊடகவியலாளர்கள்.

ஜனநாயகத்தின் முக்கியமான ஒரு அம்சமான தேர்தல் நடைபெறுகின்ற இந்தச் சந்தர்ப்பத்தில், 'ஜனநாயத்தின் நான்காவது தூண்கள்' என்று கூறப்படுகின்ற ஊடகவியலாளர்கள் ஒரு அரசாங்க அதிகாரியினால் தவிர்க்கப்படுவதென்பது, மட்டக்களப்பில் தேர்தல் காலத்தில் கடைப்பிடிக்கப்படக்கூடிய ஜனநாயக விழுமியங்கள் பற்றிய கேள்விகளை எழுப்புவதாக குற்றம் சுமத்துகின்றார்கள் அப்பிரதேசவாழ் ஊடகவியலாளர்கள்.