இலங்கையில் தீவிரமடையும் வானிலை: உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கடந்த மூன்று வாரங்களாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் 15 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

மேலும், நாடளாவிய ரீதியில் 3727 குடும்பங்களைச் சேர்ந்த 11864 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

வெள்ளம், மண்சரிவு, மழை போன்ற காரணிகளினால் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், 23 பேர் காயமடைந்துள்ளனர்

மேலும், 17 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், 3304 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

மாகாணங்களைப் பொறுத்தமட்டில், தென் மாகாணத்தில் 1982 குடும்பங்களை சேர்ந்த 6840 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 3005 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

வெள்ளம், பலத்த காற்று, மண்சரிவு, மரம் மற்றும் மண் சரிவு, கடும் மழை போன்றவற்றினால் இந்த அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.