அமெரிக்க வீசா நிராகரிப்பு - சற்று முன்னர் நாடு திரும்பிய கோட்டாபய..!


டுபாய் சென்றிருந்த முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குழுவினர் சற்று முன்னர் நாடு திரும்பியுள்ளனர்

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குச் செல்லும் நம்பிக்கையுடன் அண்மையில் நாட்டிலிருந்து சென்றிருந்தவர் மீண்டும் இலங்கை வந்துள்ளார்.

எமிரேட்ஸ் விமானமான EK 605 இல் வருகை தந்த முன்னாள் அதிபர், சிறப்பு விருந்தினர் முனையம் ஊடாக வெளியேறியதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோட்டாபய ராஜபக்சவுடன், அவரது மனைவி அயோம ராஜபக்ச, பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார மற்றும் மற்றுமொரு நபர் வந்துள்ளதாகவும், அவருடன் சென்ற மகன் மனோஜ் ராஜபக்ச, அவரது மனைவி மற்றும் குழந்தை வரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 25ஆம் திகதி டுபாய் சென்ற கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு செல்ல விசா கோரியதாகவும், விசா வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

செல்லும் வழியில் அவர் டுபாயில் இருந்து பெறக்கூடிய இராஜதந்திர சலுகைகளை பெற முயற்சித்ததாகவும், டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள சிறப்பு விருந்தினர் ஓய்வறையை பணம் செலுத்தாமல் பயன்படுத்துமாறு அவர் விடுத்த கோரிக்கை அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் டுபாயில் விடுதி ஒன்றில் தங்கி ஓய்வெடுத்த முன்னாள் அதிபர் இன்று இலங்கை திரும்பியுள்ளார்.