இலங்கையில் இளைஞர் - யுவதிகளின் ஆக்ரோசமான செயற்படு - வெளியாகியுள்ள எச்சரிக்கை


இலங்கையில் வாழும் இளைஞர் - யுவதிகள் மிகவும் பொறுமையிடனும் பொறுப்புடனும் செயற்படுமாறு காவல்துறை ஊடக பேச்சாளர் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு குதிரை பந்தய மைதானத்தில் நேற்று முன் தினம் இளம் பெண் ஒருவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்.

காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்த காதலன் காவல்துறையினரின் விசாரணையின் போது காதலி தன்னை விட்டு பிரிந்துவிடுவாளோ என்ற பயத்தில் தான் காதலியை கொன்றதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த இளைஞன் களனி கங்கையில் குதித்து தற்கொலை செய்துக் கொள்வதற்கு 2 முறை முயற்சித்துள்ளார். பின்னரே காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்கள் அல்லது அந்த வயதில் உள்ள இளைஞர் யுவதிகள் மிகவும் ஆக்ரோஷமாக செயற்படும் ஒரு போக்கை இந்த நாட்களில் காண முடிகின்றது.

இளைஞர்கள் தீர்மானம் ஒன்றை எடுக்கும் போது சிந்தித்து செயற்படாமல் அந்த சந்தர்ப்பத்தில் ஏற்படும் கோபத்திற்கமைய செயற்படுகின்றார்கள். கோபத்தின் விளைவினை இந்த சம்பவத்தின் மூலம் பார்க்க முடிகின்றது.

இதனால் எந்த ஒரு தீர்மானம் எடுக்கும் போதும் மிகவும் அமைதியாக சிந்தித்து எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். உங்களால் உங்கள் குடும்பத்திற்கும் உறவினர்களுக்கும் மிகப்பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றீர்கள்.

பல கனவுகளுடனேயே உயர் கல்விகளை ஆரம்பிக்கின்றீர்கள். கோபத்தால் எடுக்கும் முடிவில் முழு குடும்பமே பாதிக்கப்படுவதுடன் நீங்களும் குற்றவாளி பட்டியலில் இணைகின்றீர்கள்.

இதனால் அவதானமாக செயற்படுமாறு இளைஞர் யுவதிகளிடம் கேட்டுக்கொள்கின்றோம்” என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.