வெடுக்குநாறி மலையில் அகற்றப்பட்ட சிலைகள் தொடர்பில் நீதிமன்றின் அதிரடி உத்தரவு!



வவுனியா வெடுக்குநாரி மலை ஆதிசிவன் கோயிலிலிருந்து அண்மையில் அகற்றப்பட்ட சிலைகளை மீண்டும் அங்கு வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என அதிபர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா நீதவான் நீதிமன்றத்தில், நீதவான் தேவராசா சுபாஜினி முன்னிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அதிபர் சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

“வெடுக்குநாரி மலையில் வழிபாடுகளை மேற்கொள்ள ஏற்கனவே நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், நேற்றைய தினம் அங்கு வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எனினும், விக்கிரகங்கள் இன்றி அங்கு வழிபாடுகள் நடத்தப்பட்டமை தொடர்பிலும், வெடுக்குநாரி மலையிலிருந்த திருவுருவ சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள் ஆகியன காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த சமர்பணங்களை ஆராய்ந்த வவுனியா நீதவான், வெடுக்குநாரி மலையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட விக்கிரகங்களை அதே இடத்தில் மீண்டும் பிரதிஸ்டை செய்யுமாறும், பூஜை பொருட்களை சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கையளிக்குமாறும் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதுமட்டுமன்றி, தொல்லியல் திணைக்களத்தின் மேற்பார்வையுடன் திருவுருவச் சிலைகள் மீள பிரதிஸ்டை செய்யப்பட வேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பூஜை வழிபாடுகளுக்கு எவ்வித இடையூறுகளையும் விளைவிக்காதிருப்பதற்கும், அங்கு பாதுகாப்பு மேற்பார்வைகளை மாத்திரம் மேற்கொள்வதற்கும் காவல்துறையினருக்கு நீதிமன்றத்தால் கட்டளையிடப்பட்டுள்ளது.

அத்துடன், வெடுக்குநாரி மலையிலிருந்த விக்கிரகங்கள் சேதப்படுத்தியமையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதை துரிதப்படுத்துவதற்கும்  கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் மே மாதம் 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது” எனவும் தெரிவித்தார்.