ராஜபக்சர்கள் சூறையாடியதை ஈடுகட்ட சாதாரண மக்கள் மீது வரியா


எமது நாட்டைக் கட்டியெழுப்ப புதிய இலக்கும்,தொலைநோக்கு பார்வையும் தேவைப்பட்டாலும், நடைபாதையில் வியாபாரம் செய்யும் வியாபாரி முதல் எல்லோர் மீதும் தற்போதைய அரசாங்கம் வரிக்கு மேல் வரி விதிப்பதாகவும்,சர்வதேச நாணய நிதியத்தின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதாகவே இதற்கு அவர்கள் காரணமாக கூறுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொத்துவில் கட்சி அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று(31) கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,  “சர்வதேச நாணய நிதியத்தை கையாள்வது என்பது சாதாரண மக்களுக்கு குறைந்த அழுத்தத்தை கொடுப்பதானதாக இருந்தாலும், தற்போதைய அரசாங்கம் மக்கள் மீது வரிகளை சுமத்தி,ராஜபக்சர்கள் திருடிய பணத்தை ஈடுகட்ட மக்களிடமிருந்தே அறவிட்டுக்கொண்டிருக்கிறது.

ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தாலும் நாட்டு மக்கள் மீது எந்த அழுத்தமும் இல்லாத வகையில் சர்வதேச நாணய நிதியத்தை கையாளுமாறே 220 இலட்சம் மக்களும் எதிர்பார்க்கின்றனர்.

தற்போதைய அதிபரும் ஏனையோரும் சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்திற்கு நடனமாடிக்கொண்டிருக்கின்றனர்.

விவசாயிகளை அழிக்கும் வேலைத்திட்டத்தின் தற்போதைய நிலையாக விவசாயிகளின் விளைச்சலை விற்கக்கூடிய நல்ல சந்தை வாயப்பொன்று இல்லாதது தான்.

விவசாயியை பாதுகாக்க,விவசாயியை அரவணைக்கும், சாதாரண மக்களின் துன்பங்களை புரிந்து கொள்ளும் பிரேமதாச சகாப்தத்தை உருவாக்குவோம்” -  என்றார்.