சீரற்ற காலநிலையால் பரவும் புதிய நோய் : இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!


நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதன்படி வயிற்றுப்போக்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகளாக வாந்தி, அஜீரணம், காய்ச்சலுடன் கூடிய வயிற்று வலி போன்றவை காணப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேநேரம் இலங்கையில் இந்த வருடத்தின் கடந்த 5 மாதங்களில் 25,000 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

பல பாடசாலைகளில் நுளம்புகள் பெருகும் இடங்களை இனங்காணுவது மிகவும் முக்கிய விடயம் என  அதன் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்துள்ளது.

2023 ஆம் ஆண்டின் இறுதியில், கிட்டத்தட்ட 90,000 நோயாளர்கள் இனங்காணப்பட்டனர்.

அதேபோல், இந்த வருடம் ஜனவரி மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

மே மாத இறுதியில் நோயாளிகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்தது.

வரும் காலங்களில் பருவமழையால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

93,874 இடங்களை ஆய்வு செய்துள்ளோம். இங்கிருந்து நுளம்புகள் பெருகக்கூடிய 28,310 பகுதிகளை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.

மேலும், நுளம்புகள் உள்ள 4,890 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன என தெரிவித்தார்

இதேவேளை, நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நஜித் சுமணசேன தெரிவித்துள்ளார்.