யாழில் திரைப்பட பாணியில் பட்டப்பகலில் நடந்தேறிய கொடூர வாள்வெட்டுத் தாக்குதல்!


யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் பட்டப் பகலில் திரைப்பட பாணியில் வாள்வெட்டு தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுன்னாகம் பகுதியில் குழுவொன்று வாகனத்தால் மகிழுந்தொன்றை மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளதுடன் வாள்வெட்டு தாக்குதலையும் நடத்திய நிலையில், காயமடைந்த நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடாபில் மேலும் தெரியவருகையில், 

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பிரதான வீதியில் சுன்னாகம் பகுதியில் விக்டர் எனப்படும் நபர் சென்ற மகிழுந்தை, பட்டா ரக வாகனத்தில் சென்ற குழுவினர் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து குறித்த குழுவினர் மகிழுந்தில் பயணித்தவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதலையும் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். ஜெகன் எனப்படும் குழுவினர் இந்த தாக்குதலை நடத்தியதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

இரண்டு வாள்வெட்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக இன்றைய தினம் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாள்வெட்டு தாக்குதலில் காயமடைந்த நால்வர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த பகுதியில் காவல்துறை மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.