கென்ய பாராளுமன்ற போராட்டத்தில் 39 பேர் உயிரிழப்பு

கென்யா பாராளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய நிதி மசோதாவை தாக்கல் செய்வதற்கு எதிராக கடந்த வாரம் போராட்டம் வெடித்தது. பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வலியுறுத்தி பொதுமக்கள் பாராளுமன்றத்தின் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.


போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பாராளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்தனர். இதன்போது அங்கிருந்த பாதுகாப்பு பொலிசார் துப்பாக்கி சூடு நடத்தினர். 

இதையடுத்து கோபமுற்ற போராட்டக்காரர்கள் பாராளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது.

இந்த வன்முறையின்போது  27 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், கென்ய பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வரி உயர்வு மசோதா திரும்ப பெறப்படுவதாக அந்நாட்டு ஜனாதிபதி வில்லியம் ரூட்டோ அறிவித்தார்.

இந்த நிலையில், அரசுக்கு எதிராக பொது மக்கள் நடத்திய போராட்டத்தில் மொத்தம் 39 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை அந்நாட்டு மனித உரிமைகள் ஆணையம் உறுதிப்படுத்தி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் 361 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும், ஜூன் 18 ஆம் திகதி முதல் ஜூலை 1 ஆம் திகதி வரையிலான காலக்கட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 32 பேர் மாயமாகி உள்ளனர் என்றும் 627 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அந்நாட்டு மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.