வெளிநாடொன்றில் இருந்து நாடு கடத்தப்பட்ட 26 இலங்கையர்கள்

வீசா இன்றி குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்து நாட்டின் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்த இலங்கை வீட்டுப் பணியாளர்கள் 26 பேர் மீண்டும் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

குறித்த பணிப்பாளர்கள் இலங்கை தூதரகத்தின் தலையீட்டின் பேரில் குவைத்தில் இருந்து நாடு கடத்தப்பட்டு இன்று (08) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பதிவு செய்துள்ள 2000க்கும் மேற்பட்ட வீட்டுப் பணியாளர்களில் இந்தக் குழு இலங்கைக்கு வருவதோடு, எஞ்சிய குழுவினரும் பகுதிகளாக இலங்கைக்கு அனுப்பப்பட்டு வருவதாகத் தூதரகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக குவைத்தின் குடிவரவுத் திணைக்களம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம், நீதித்துறை மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றிய இலங்கைத் தூதரகத்தின் அதிகாரிகள், இந்த வீட்டுப் பணியாளர்களுக்கு எதிரான வழக்குகளை மீளப் பெற்று, அவர்கள் செலுத்த வேண்டிய அபராதத் தொகையை ரத்து செய்துள்ளனர்.

அத்துடன், விமானப் பயணச்சீட்டு இல்லாத இந்த இலங்கை வீட்டுப் பணியாளர்களுக்கு இலங்கைக்கு வருவதற்கு விமான டிக்கெட்டுகளை வழங்க குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.