15 வயதுடைய மாணவனை தாக்கி கொலை செய்த உயர்தர மாணவன் : ஹம்பாந்தோட்டையில் சம்பவம்

ஹம்பாந்தோட்டை - சிப்பிக்குளம பகுதியில் இரண்டு  மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 15 வயதான  மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை (05) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஹம்பாந்தோட்டை பாடசாலையொன்றில் 10ஆம் தரத்தில் கல்வி கற்று வந்த,

பெத்தேவல வீதியைச் சேர்ந்த பைரூஸ் அஸீஸ் அஹமட் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படும் மாணவனும் ஹம்பாந்தோட்டை பாடசாலையொன்றில் உயர்தரம் கற்கும் மாணவன் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மாணவன் தந்தைக்கு சொந்தமான முச்சக்கர வண்டியில் வந்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை சமோதாகம விளையாட்டு மைதானம் அருகிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தனியார் வகுப்புக்கு சென்று திரும்பிய மாணவனே தாக்குதலுக்கு உள்ளாகி ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், உயிரிழந்தமை தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரு மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறே மோதலுக்குக் காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், மாணவனின் மரணம் தொடர்பில் 17 வயதுடைய பாடசாலை மாணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.