'இந்திய அரசே எம்மையும் வாழ விடு.." : யாழில் போராட்டத்தில் குதித்த மீனவர்கள்


  இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறும் இந்திய இழுவைப் படகை தடுத்து நிறுத்த வலியுறுத்தி இந்திய துணைத் தூதரகம் முன்பாக  மீனவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று காலை இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் புனித பொஸ்கோ பாடசாலைக்கு அருகாமைலிலுள்ள மருதடிச் சந்தியில் இருந்து, இந்திய துணைத் தூதரகம் வரை பேரணியாகச் சென்று, தூதரகம் முன்பாக கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது  இலங்கை கடற்படையே அத்துமீறலை தடுத்து நிறுத்து, கடற்தொழில் அமைச்சர் கண்ணை திறந்துபார்,
இந்திய அரசே எம்மையும் வாழ விடு, சிறிலங்கா காவல்துறையே எங்களை தடுக்காதே உள்ளிட்ட பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து தங்களது கோரிக்கைள் அடங்கிய மகஜரொன்றை மீனவர் சங்கப் பிரதிகள் துணைத்தூதரகத்தில் கையளித்தனர்.

போராட்டம் காரணமாக சுமார் இரண்டு மணி நேரம் மருதடி வீதி ஊடான போக்குவரத்தை பொலிஸார் தடை செய்து, வீதியின் குறுக்கே வீதி தடைகளைப் போட்டுப் பாதுகாப்பைப் பலப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.